Sunday, April 14, 2019

ஏமாற்றுவித்தைக்காரர்.

ஒற்றையாட்சி என்பார் உண்மைதான் ஒற்றையில் (தாள்) மட்டுமே அவர் பிரேரணை நிறைவேற்றம்.
ஓராண்டுக்குள் தீர்வென்பார் உண்மைதான் அடுத்த ஆண்டு அவர்கள் பிள்ளை வெளிநாடு சென்றுவிடும்.
அபிவிருத்திக்கான நிதியில் பாரபட்சமென்பார் உண்மைதான்
வந்த நிதிகளை பாராமலே திருப்பி அனுப்பிடுவார்.
தன் நாவினைகூட அழுத்தி உச்சரிக்க முடியாதோர் ஐ.நா விற்கு  இம்முறை அழுத்தம் கொடுத்தோம் என்பார்.
கை,கால் முஷ்டிகளில்கூட சிறுவலுவும் இல்லாத தலைமையின் கீழ் சமஷ்டிதான் ஒரே தீர்வென்பார்.
போரின் பின்னான இயல்பு வாழ்வு இன்றளவிலும் வாய்க்கவில்லை என்பதே இவர்களிற்கான நல்ல வாய்ப்பு.
புகலிடம் கோரியவர்களில் பழமை
வாதிகளிடமும் தொடருது இவர்கள் ஏய்ப்பு.
விடுவிக்கப்படாதிருக்கும் கைதிகள்,காணிகள் இருக்குமட்டும் இவர்களிற்கும் எதிர்காலம் இருக்கும்.
வேலிதாண்டும் வேளைகளில் இவைகளை பார்த்து சத்தம்போடவும் சுத்தம் செய்யவும் இருந்த சேவலையும் அதன் சேனையையும் சரித்தாயிற்று.
அடைகாக்கப்படும் முட்டைகளில் ஒன்று அகிலம் காக்கவென வரும்வரைக்கும்
காக்கா தன்னை குயில் என்றும்
கழுதை தன்னை குதிரையென்றும் சொல்லட்டும்.
நம்பித்தொலைக்காமலிருப்பதே நம் தலைமுறைக்கு நாம் செய்யும் பெரிய புண்ணியம்.
-பிரகவி.

 

No comments:

Post a Comment