Sunday, June 19, 2016

நடு வீதி நம் விதி


விதி செய்த சதி
வந்தோம் நடு வீதி
வரவேற்றது புழுதி
வந்து சேர்ந்தது வியாதி
வறுமை எங்கள் அகராதி
வலுச்சேர்த்தது என் சாதி
கழுத்தை அடைத்தது கடன்
துரத்தி விட்டது பிள்ளையுடன்
உரத்துக்கேட்கிறது பசியின் குரல்
உயிர் வரை உலுப்புது சாவின் நிழல்
வறுமைக்கோட்டில் மட்டுமே நடந்தோம்
உரிமை கேட்டதால் உதைபட்டு வீழ்ந்தோம்
பெருமையோடு எம்மை சேர்த்தது வீதி
பிறந்த நாட்டிலும் எமக்கு இதுதானா நீதி
புரட்சிகள் எல்லாம் வீதியில் இறங்கியும்
வறட்சி மட்டுமே எங்கள் வாழ்வாகி போனது.
இணையத்தில் பகிராமல் இதயத்தில் பகிருங்கள் -நாளை
நடுவீதி வேண்டாம் எனும் நல்நீதி வேண்டும்.  
       நன்றி.

     ஆர்.ஜே.பிரகலாதன்.
       2016.06.06.

Saturday, February 13, 2016

காட்சியும் அதன் நீட்சியாய் கவிதையும்.

காதல் வைரஸ்

"காதல் வைரஸ்"
ஒரு முறை இந்நோய் இருவரைத்தாக்கும்
உருவாக முன்பே உயிர்வரை பூக்கும்
விடுமுறை இன்றியே வேதனை கூட்டும்
வெறும் வயிறதையும் பசியின்றி காட்டும்.
குணங்குறி காட்டும் உணர்வதை தாக்கும்
அணங்கெதிர்ப்பட்டால் அங்கேயே நிற்கும்
தினமதன் தீவிரம் கூடியே காட்டும்
மனமதன் ஈரமும் மறையவே வாட்டும்.
கண்ணால் பரவும் கதை பேச்சு சுருக்கும்
இதயம் வரைக்கும் இதன் தாக்கம் இருக்கும்
காத்திருக்கையிலே கால் மிக வலிக்கும்
பார்த்திருக்கையிலே பார்வையும் பறிக்கும்.
சித்த மருத்துவமும் செயலிழக்கும்
முத்த மருத்துவம் குணப்படுத்தும்
காதல் வென்றிட முடியா வியாதியடா
காலம் சொல்லிட முடியா ஆதியடா.
                                                  - R.J.பிரகலாதன்.